அதிவேகம், போதை, காவல்துறை வாகனம் மீது ஏறி நடனம் - பசும்பொன் சென்ற வாகன விபத்துகளில் 2 இளைஞர்கள் மரணம் :

பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு அதிவேகமாக சிலர் ஆர்ப்பரித்தபடி சென்ற வாகனங்கள், வெவ்வேறு இடங்களில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

பசும்பொன் தேவர் ஜெயந்தியை யொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 186 வழித்தடங்களின் வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் 148 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் 900 இரும்பு உலோகத் தடுப்புகளை வைத்து 8 ஆயிரம் போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பசும்பொன்னுக்கு வாகனங்களில் சென்ற சிலர் மது போதையிலும், அதி வேகமாகவும், வாகனங்களின் மேற்கூரையிலும், பக்கவாட்டிலும் தொங்கிக் கொண்டு ஆர்ப்பரித்தபடி சென்றனர்.

இதில் ராமநாதபுரம் அருகே நதிப்பாலம், சடையனேந்தல் மற்றும் பரமக்குடி ஆகிய இடங்களில் நடந்த 3 விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பெருங்குளத்திலிருந்து காரில் வந்த கருணாகரன் மகன் விக்னேஸ்வரன் (21) மற்றும் மதுரையில் இருந்து சுமோ வாகனத்தில் வந்த மதிச்சியத்தைச் சேர்ந்த வசந்த் (29) எனத் தெரியவந்தது. மேலும் இருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதனிடையே பசும்பொன் மற்றும் கமுதி அருகே காவல்துறை மற்றும் வருவாய்த் துறை வாகனங்களின் மீது ஏறி நடனம் ஆடிய இளைஞர்களை வீடியோ மூலம் அடையாளம் கண்டு அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE