ஜெயங்கொண்டத்தில் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணைகள் வழங்கல் :

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 33 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்புக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கிப் பேசியது: தமிழக அரசின் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரியலூர் கோட்டத்தில் 3,950 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக தற்போது ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட 33 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்புகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உயர் மின்னழுத்த, குறைந்த மின்னழுத்த மின்சார பிரச்சினைகளை சரிசெய்ய 226 மின்மாற்றிகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது 108 மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். மேற்பார்வைப் பொறியாளர் அம்பிகா, செயற்பொறியாளர்கள் கண்ணன் (பெரம்பலூர்), செல்வராசு (அரியலூர்), உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE