தருமபுரி கிளைச் சிறை வாசலில் இருந்து தப்பி ஓடிய, கொலை வழக்கில் கைதான நபரை போலீஸார் நள்ளிரவில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) விஜி (38). இவர் குடும்பத் தகராறில் 2 நாட்களுக்கு முன்னர் மனைவி ரூபாவை கொலை செய்தார். பின்னர் தளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளைச்சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். நேற்று முன் தினம் இரவு தருமபுரி கிளைச் சிறையின் நுழைவு வாயிலில் பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்து கொண்டிருந்த போலீஸாரை தள்ளி விட்டுவிட்டு கார்த்திக் தப்பி ஓடினார்.
கை விலங்குடன் கார்த்திக் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக தளி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இளையமூர்த்தி தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் தேடியபோது, தப்பியோடிய பகுதிக்கு அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. எனவே, அவரை போலீஸார் அன்று நள்ளிரவிலேயே கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago