ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த - குமரி விசைப்படகு மீது பனாமா கப்பல் மோதியது : 17 மீனவர்கள் காயம்; இந்திய கடலோர காவல் படை விசாரணை

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி விசைப்படகு மீது பனாமா நாட்டு கப்பல் மோதியதில் 17 மீனவர்கள் காயம் அடைந்தனர். கப்பலில் இருந்தவர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாட்டைச் சேர்ந்த ராஜமணி என்பவருக்கு சொந்தமான ‘சிஜூமோன்’என்ற விசைப்படகில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 17 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற பனாமா நாட்டைச் சேர்ந்த ‘நேவியாஸ் வீனஸ்’ என்ற சரக்கு கப்பல், மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இவ்விபத்தில் மேலமணக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ், குளச்சலைச் சேர்ந்த ஜாண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 15 மீனவர்களும் சிறு காயங்களுடன் தப்பினர். விசைப்படகு சேதமானது.

விசைப்படகை ஓட்டிச்சென்ற ரூபன்ரோஸ் என்ற மீனவர் விபத்து குறித்த தகவலை இந்திய கடலோர காவல்படைக்கு வயர்லெஸ் மூலம்தெரிவித்துள்ளார். கடலோர காவல்படையினர் விரைந்து சென்று காயமடைந்த மீனவர்கள் ஜாண், அருள்ராஜ் ஆகியோரை மீட்டனர். விபத்து ஏற்படுத்திய பனாமா சரக்கு கப்பல்,அதில் இருந்தவர்களை விசாரணைக்காக கொச்சின் துறைமுகம் அழைத்துச் சென்றனர். காயங்களுடன் மீட்கப்பட்ட இரு மீனவர்களும் கொச்சியில் உள்ள அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசைப்படகில் இருந்த மற்ற மீனவர்களை, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொலை முயற்சி வழக்கு

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தேசிய கடல் பகுதியிலும், சிறப்பு பொருளாதார கடல் பகுதியிலும் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகள் செய்துதர வேண்டும். விசைப்படகு மீது மோதிய கப்பல் மாலுமி மற்றும் கப்பல் உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்