கிருஷ்ணகிரி, பர்கூர் வட்டத்தில் 340 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் வட்டத்தில் உள்ள 340 தனியார் பள்ளி வாகனங்களை நேற்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர், டிஎஸ்பி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் வட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், 340 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில், பள்ளி வாகன விதி 2012-ன் படி அனைத்து பள்ளி வாகனங்களிலும் தீயணைப்பு கருவி, அவசர வழி மற்றும் வாகனத் தின்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் சரி செய்த பின்னர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி வாகனங்களை, கிருஷ்ணகிரி வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் சாமி, டிஎஸ்பி சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் அன்புச் செழியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக டிஎஸ்பி பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் பாதுகாப்பாக இயக்குவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார். ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள பள்ளி வாகனங்கள் நாளை (23-ம் தேதி) ஊத்தங்கரையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE