கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு - 100 மூட்டை அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் : தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் சிறப்பு வழிபாடு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 100 மூட்டை அரிசி சாதத்தால் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். லிங்கத்தின் மேல் சாற்றப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறும் என்பது இறை நம்பிக்கை. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காஞ்சி மடத்தைச் சேர்ந்த பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் அன்னாபிஷேக விழா கமிட்டி சார்பில் கடந்த 33 ஆண்டுகளாக இங்கு அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று 100 மூட்டை அரிசியால் சாதம் சமைக்கப்பட்டு பிரகதீஸ்வருக்கு சாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பலவிதமான பலகாரங்களால் அலங்கரிக்கப்பட்டு, இரவு 7 மணியளவில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்பு, பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், மீதமுள்ள அன்னம் அருகில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில்...

இதேபோல, தஞ்சாவூர் பெரியகோயிலில் 6 அடி உயரம், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினமான நேற்று 750 கிலோ பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதம், பெருவு டையார் திருமேனி முழுவதும் சாற்றப்பட்டு, 600 கிலோ காய்கறிகள் மற்றும் இனிப்பு வகை களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE