இடுவாய் கிராமத்தில் செயல்படும் - மதுபானக்கடையை அகற்ற ஆட்சியரிடம் வலியுறுத்தல் :

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்சு.வினீத்திடம், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

இடுவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை கடை இடமாற்றம் செய்யப்படவில்லை. இதை சுட்டிக்காட்டி, கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் அக்கடையை அகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடுவாய் கிராமத்தில் 1,487 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையை இரு கடைகளாக பிரிக்கக் கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 14-ம் தேதி ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பையும், பிஏபி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கோரி அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE