நெல்லை, தென்காசி உட்பட 4 மாவட்டங்களில் 2,695 மையங்களில் - 5-வது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

தமிழகத்தில் ஐந்தாவதுகட்டமாக நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 750 மையங்களில் இம்முகாம் நடைபெற்றது. வண்ணார் பேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார். பின்னர், பரணி நகரில் தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் 342 இடங்கள், பேரூராட்சி பகுதிகளில் 114 இடங்கள், நகராட்சி பகுதிகளில் 142 இடங்கள் என மொத்தம் 598 மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாம்கள் நடைபெற்ற பகுதிக ளுக்கு அருகில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏராளமா னோர் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 777 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டம் முழுவதும் நடமாடும் குழுக்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 570 மையங்களில் 5-வது கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளமடம் அரசு ஆரம்பப் பள்ளி, தோவாளை அரசு தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, ஆரல்வாய் மொழி அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட பல இடங்களில் நடந்த சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் 5-வது கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.

இதற்கு முன்பு ஏற்கெனவே நடந்த 4 தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை முதல்கட்டமாக 9,95,687 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 3,06,162 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி கல்வித்துறை ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE