தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் - காந்தி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் :

திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், காந்தியடிகளின் பிறந்தநாளான அக். 2-ம் தேதியை ஒட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.போட்டியை முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ப.ராமகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.

போட்டியில் மாணவ, மாணவிகள் 46 பேர் பங்கேற்றனர்.

திருப்பூர் பெருமாநல்லூர் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் கு.மகாதேவன் முதல் பரிசுபெற்றார். திருப்பூர் ராக்கியாபாளையம் செஞ்சூரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் த.யோகேஸ்வரன் 2-ம் பரிசும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கு.சஞ்சுவிகாசினி 3-ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ச.கோகுல், வி.பூபதி ஆகியோர் சிறப்புப் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடந்த பேச்சுப் போட்டியில் 22 பேர் பங்கேற்றனர். எல்.ஆர். ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கோ.கிரிஜா ஆரோக்கியமேரி ஒருங்கிணைத்தார்.

உதவி பேராசிரியர்கள் கா.அமைதி அரசு, ச.அமுல்செல்வி, கா.இந்திரா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரி மாணவர் மா.வசந்த்குமார் முதல் பரிசும், உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி மு.விஷ்ணுபிரியா 2-ம் பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் ப.விஜயராஜ் 3-ம் பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE