அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி - திருச்செந்தூர், குமரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் :

அனைத்து நாட்களும் கோயில்களை வழிபாட்டுக்கு திறக்க வலியுறுத்தி, திருச்செந்தூரில் பாஜகசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து கோயில்களையும் பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்க வேண்டும். கோயில் நகைகளை உருக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்து விரோத போக்கை தமிழக அரசு நிறுத்த வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் 12 முக்கிய கோயில் நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன், வர்த்தகர் அணி தலைவர் ராஜகண்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கரோனா தொற்றை காரணம் காட்டி வாரத்தில் மூன்று நாட்கள் கோயில்களை அடைக்கிறார்கள். மூன்று நாட்கள் அடைக்கும் போது, மற்ற நாட்களில் கூட்டம் குவிகிறது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் தர்ப்பணம் கொடுப்பதை, கரோனாவைகாரணம் காட்டி தடுத்துவிட்டனர். மொத்தத்தில் இந்துக்களின் வழிபாடுகளை எல்லாம் தடுக்கிறார்கள். இதை மாற்றிக்கொள்ள வேண்டும், என்றார் அவர்.

நாகர்கோவில்

நாகர்கோவில் நாகராஜா கோயில் முன்பு பாஜக சார்பில் நேற்று மாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உட்பட ஏரளாளமானோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி 8-வது வார்டு பாஜக தலைவர் பாலகங்காதரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தரிசனம்செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். எனவே, திருநெல்வேலி உள்ளிட்டதமிழகம் முழுவதும் கோயில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதிஅளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE