தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த மாதம் முழுவதும் - விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் : நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் இம்மாதம் விடுமுறை நாட்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நா. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நிகழாண்டுக்கான கொள் முதல் பருவம் அக்.1-ம் தேதி தொடங்கியது. அக். 2, 3-ம் தேதிகளில் விடுமுறை நாட்களாக இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை என விடுமுறை நாட்களிலும் கொள் முதல் செய்யப்படும்.

மாவட்டத்தில் தற்போது 244 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் அக்.4-ம் தேதி மட்டும் 4,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அக்.1 முதல் 4-ம் தேதி வரை 10,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி காலை 7 மணி முதல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இணையவழி முன்பதிவு முறை நடைமுறைக்கு வந்தாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பழைய நடைமுறையும் தொடர்கிறது.

கொள்முதல் நிலையங்களில் ஊழல் புகார் வந்தால், கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்புடைய பட்டியல் எழுத்தர், உதவுபவர்கள் உடனடி யாகப் பணியிலிருந்து விடுவிக் கப்படுவர்.

ஒரு நெல் உலர்த்தும் இயந்தி ரத்தை வேளாண் பொறியியல் துறை வழங்கியுள்ளது. இந்த இயந்திரம் ஒரத்தநாடு புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் காயவைத்து தரப்படும். இது, வெற்றிகரமாக அமைந்தால், பிற மாவட்டங்களிலிருந்து நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வர வழைக்கப்படும்.

குறுவை பருவத்தில் 3.60 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதில், இதுவரை 1.30 லட்சம் டன் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. இன்னும் 2.30 லட்சம் டன் கொள்முதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொள்முதல் பணி உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.

இந்தப் பருவத்துக்குத் தேவையான அளவுக்கு சாக்குகள் இருப்பில் உள்ளன. மாவட்டத்தில் 3 நடமாடும் கொள்முதல் குழுக்கள் இன்று (நேற்று) முதல் பணியைத் தொடங்கியுள்ளன. இக்குழுக்கள் கள ஆய்வு செய்து, கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE