பெரம்பலூர் மாவட்டத்தில் - 2 இளைஞர்கள் போக்ஸோவில் கைது : கரூரில் சலவை தொழிலாளி மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ஜெயசூர்யா(20). இவர், நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் மாணவி புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் தொலைபேசி வழியாக அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஜெயசூர்யாவை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள துங்கபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிமாறன்(26), விவசாய கூலித் தொழிலாளி. இவர், தன்னை காதலிக்கும்படி 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிமாறனை நேற்று கைது செய்தனர்.

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல்(43), சலவைத் தொழிலாளி. இவர், அண்மையில் 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கரூர் நகர போலீஸில் சிறுவனின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில், சண்முகவேல் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE