திருப்பூர் மாநகரில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க கோரிக்கை :

திருப்பூர் மாநகரில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமையிலான நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, மாநகர பொறியாளர் ஜி.ரவி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், “மாநகரில் சமீபகாலமாக, 15 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டால் சரி செய்வதாக கூறுவதும், அவ்வப்போது ஓரளவு குடிநீர் பிரச்சினை சரி செய்வதும், மீண்டும் தட்டுப்பாடு தொடர்வதும் தொடர்கிறது.

நகரெங்கும் குடிநீர் விநியோக குழாய்கள் தரம் இல்லாததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிந்து வீணாகிறது. எனவே, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தேவையான அளவு குடிநீர் கிடைக்க செய்யவேண்டும். இப்பிரச்சினை தீரும் வரை லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE