மலேசிய போதை கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட - சிவகங்கை இளைஞரை தமிழகம் அழைத்துவர ஆட்சியரிடம் மனு :

சிவகங்கை மாவட்டம் முத்துப் பட்டி புதூரைச் சேர்ந்தவர் கண்ணன். ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகன் ஆனந்த் (20) கடந்த ஆண்டு மார்ச் 8-ல் கோயில் வேலைக்காக மலேசியா சென்றான். அங்கு சென்றபிறகு தான் அவனை அழைத்துச் சென்றவர்கள் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என தெரியவந்தது. அக்கும்பல் எனது மகனை அறையில் அடைத்து வைத்து போதை மருந்தை பேக் செய்யும் வேலை கொடுத்தது. மறுத்ததால் மகனை கொடுமைப்படுத்தினர்.

இதனால், அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ளவர்கள் மூலம் எனது மகனின் நிலையை அறிந்து தமிழக போலீஸ் மூலம் மலேசிய போலீஸிக்கு தகவல் கொடுத்தோம். மலேசிய போலீஸார் போதைப் பொருள் கடத்தல் கும்பலைக் கைது செய்தனர்.

மேலும் எனது ஒரு மாதத்தில் விடுவிப்பதாகக் கூறிய அந்நாட்டு போலீஸார், தற்போது எனது மகனை சாட்சியாக மாற்றி ஊருக்கு அனுப்ப மறுக்கின்றனர்.

மகனின் எதிர்காலம் கருதி அவனை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE