தமிழகத்தில் 56% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் : தருமபுரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 56 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத் தியுள்ளனர் என தருமபுரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார்.

தருமபுரி அடுத்த பழைய தருமபுரி உள்ளிட்ட இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறிய தாவது:

கடந்த 12-ம் தேதி தமிழகத்தில் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, இந்தியாவிலேயே ஒரேநாளில் அதிக தடுப்பூசிகளை செலுத்திய மாநிலமாக தமிழகம் சாதனை படைத்தது. கடந்த 11-ம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் சதவீதம் 45 ஆக இருந்த நிலையில் மறுநாளில் அது 52 சதவீதமாக உயர்ந்தது.

தொடர்ந்து ஒருவாரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சதவீதம் 56 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது சிறப்பு முகாம் இன்று (நேற்று) காலை 7 மணிக்கு தொடங்கியது. 15 லட்சம் தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் முகாம் நடந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் என்ற வரிசையில் 7 லட்சத்து 59 ஆயிரத்து 658 பேர் உள்ளனர். அவர்களின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 6 லட்சத்து 38 ஆயிரத்து 540 பேர். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 748 பேர்.

கடந்த 12-ம் தேதி சிறப்பு முகாமின்போது தருமபுரி மாவட்டத்தில் 875 இடங்களில் 49 ஆயிரத்து 136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது சிறப்பு முகாமான இன்று(நேற்று) 215 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 22 ஆயிரத்து 16 ஊசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதத்தில் 52 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் பெற்று சிறப்பாக கையாண்டதால் 19 லட்சம் டோஸ் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 53 லட்சம் டோஸ் பெற்று சிறப்பாக கையாண்டதால் 33 லட்சம் டோஸ் கூடுதலாக மத்திய அரசு வழங்கியது.

செப்டம்பர் மாத இலக்கு 1 கோடியே 4 லட்சம் என அறிவிக்கப்பட்டு, இன்றுடன் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும்.தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள மக்களிடம் குழந்தைத் திருமணம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE