இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2007-ம் ஆண்டு முதல் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 404 உறுப்பினர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்பு சாரா தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக தூய்மைப் பணிபுரிவோர் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்பு சாரா தூய்மைப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து தொடர்புடைய சுகாதார ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்துடன், மாவட்ட மேலாளர், தாட்கோ, கிருஷ்ணகிரி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago