கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து : கட்டிட மேஸ்திரி உட்பட 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சக்திவேல் (35). இவர், கிருஷ்ணகிரியில் கட்டிட வேலைக்காக காவேரிப்பட்டணம் கொசமேடு பகுதியைச் சேர்ந்த மேகலா (35), லட்சுமி (32) ஆகிய 2 பேரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி வந்தார். காலை 9 மணியளவில், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் சிக்னலில் நின்றனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற லாரி பக்கவாட்டில் நின்றது. சிக்னல் முடிந்தவுடன் லாரி ஓசூர் சாலையை நோக்கி சென்றது.

கிருஷ்ணகிரி நகருக்குள் செல்வதற்காக சக்திவேல், இருசக்கர வாகனத்தை வளைத்த போது, லாரி மோதியது. இந்த விபத்தில் சக்திவேல், மேகலா ஆகியோர் லாரியில் சிக்கி படுகாயங்களுடன் உயிரிழந்தனர். காயங்களுடன் லட்சுமி உயிர் தப்பினார். கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் 2 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் சம்பத் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE