அரசுப் பள்ளியில் படித்ததை பெருமையாக கருதுகிறேன் : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நெகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் சிறப்பாக பணியாற்றிய 6 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, பாராட்டுச் சான்றிதழ், பதக்கம், தலா ரூ.10,000 ஊக்கத்தொகையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியது: நான் அரசுப்பள்ளியில் படித்தவன் என்பதை என்றும் பெருமையாக கருதுகிறேன். எனக்கு நல் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

பெரம்பலூர் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முன்னேறுவதற்கு ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரிடம் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து ஆசிரியர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜே.அ.குழந்தைராஜன் (வேப்பூர்), அ.மாரிமீனாள்(பெரம்பலூர்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE