பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக அரசுப் பேருந்தில் கடத்திய 4 மூட்டை குட்கா பறிமுதல் :

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு அரசுப் பேருந்தில் 4 மூட்டைகளில் கடத்திச் சென்ற குட்கா பொருட்களை கிருஷ்ணகிரியில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் 2 பேர் தங்களை துணி வியாபாரி எனக் கூறி, 4 மூட்டைகளில் துணிகள் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து துணி மூட்டைகளை பேருந்தில் ஏற்றியவர்கள் சேலத்திற்கு டிக்கெட் எடுத்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தபோது, பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்தார்.

அப்போது, மூட்டையில் என்ன உள்ளது என கேட்டபோது, பேருந்தில் இருந்த 2 பேரும் கீழே இறங்கி தப்பியோடினர். இதில் சந்தேகமடைந்த டிக்கெட் பரிசோதகர், அங்கு புறநகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

போலீஸார் பேருந்தில் இருந்த மூட்டையில் சோதனை செய்தபோது குட்கா, புகையிலைப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து 4 மூட்டைகள் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த, கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் நேற்று பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE