சூளகிரி அருகே வேகத்தடை அமைக்கக் கோரி மக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

சூளகிரி அருகே வேகத்தடை அமைக்கக் கோரி, அலுவலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது உலகம் கிராமம். இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வேகத்தடை அமைக்க வேண்டுமென நீண்ட நாட்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் வேகத்தடை அமைக்க தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் அலுவலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று சாலையோரம் ஒன்று திரண்ட கிராம மக்கள் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வேகத்தடை அமைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். விபத்து அபாயம் உள்ளதால் பலமுறை தெரிவித்தும் வேகத்தடை அமைக்காமல் மவுனமாக இருப்பது வேதனையளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE