ஊத்தங்கரையில் பூட்டிய வீடுகளில் திருடியவர் கைது : 23 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

ஊத்தங்கரையில் பூட்டிய வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து, 23 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதேபோல், காமராஜ் நகர் கீழ்குப்பம் அரசுப் பள்ளியில் உதவி அலுவலராக பணியாற்றி வரும் அழகுதுரை (33) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். திருட்டில் தொடர்புடையவர்களை கைது செய்ய, ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது மத்தூர் அருகே புளியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (30) எனத் தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 23 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE