‘கரூர் மாவட்டத்தில் இதுவரை 3,53,538 டோஸ் தடுப்பூசிகள்’ :

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் 100 நாள் ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை சுவரொட்டிகள், ஒட்டுவில்லைகளை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 1,970 மனுக்கள் பெறப்பட்டு 1,132 மனுக்கள் ஏற்கப்பட்டு 960 மனுக்களுக்கு உரிய நிவாரணம், நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இதுவரை 3,53,538 டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 3,512 மாற்றுத்திறனாளிகளுக்கு(57 சதவீதம்) அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மாநில அளவில் முதல் 3 இடங்களில் ஒன்றாகும். தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி மூலம் ரூ.1.55 கோடி திரட்டப்பட்டு தனியார் மருத்துவமனைகள் மூலம் இலவசமாக 25,000 தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நிவாரண நிதியாக 3,13,211 குடும்பத்தினருக்கு ரூ.125.19 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது. ரூ.12.90 கோடியில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக 8,692 மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE