தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் - இஸ்ரேல் நாட்டு விவசாய தொழில்நுட்ப அலுவலர் ஆய்வு :

தளி கொய்மலர் மகத்துவ மையத்தில், தென்னந்திய இஸ்ரேல் நாட்டு விவசாய இணைப்பு தொழில்நுட்ப அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய மற்றும் இஸ்ரேல் அரசுகள் கூட்டு ஒப்பந்தத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் கொய்மலர் மகத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கொய்மலர் மகத்துவ மையத்தில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொய்மலர் சாகுபடியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை 8,602 விவசாயிகள், வங்கி உயர் அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உயர்தொழில்நுட்ப முறையில் பயிற்சி பெற்று பயனடைந்தனர்.

இந்நிலையில் நேற்று தளி மகத்துவ மையத்தில் தென்னிந்திய இஸ்ரேல் நாட்டு விவசாய இணைப்பு தொழில்நுட்ப அலுவலர் ஏய்ர் ஈஷேல், புதுடெல்லி அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளரும், திட்ட அலுவலருமான பிரம்மதேவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கொய்மலர் மகத்துவ மையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்பங்களை பார்வையிட்டனர்.

மேலும், 2021-22-ம் ஆண்டு செயல் திட்டத்தைப் பற்றி ஆலோசனை மேற்கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் பணிகளை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ரவிச்சந்திரன், கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் (பொ) ராம்பிரசாத் ஆகியோர் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

கொய்மலர் மகத்துவ மையத்தில் பசுமைக்குடிலில் பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்யப்படும் கொய் மலர்கள் மற்றும் நிழல்வலை கூடாரத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பலவித இலை அலங்காரச்செடிகள் குறித்து தளி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆறுமுகம் விளக்கம் அளித்தார். கொய்மலர் மகத்துவ மையத்தில் பலவித கொய்மலர்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததையும் பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE