அதிக விலைக்கு விற்க பதுக்கப்பட்ட - ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் :

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பரவலையொட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலும் 5 மணிக்கு மேல் மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டு விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் உதவி ஆணையர் சுகுமார் மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு திருப்பூர் காந்தி நகர் பகுதியில் எதிரெதிரே உள்ள இரண்டு மதுபானக் கூடங்கள், கூலிபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுவதை கண்டறிந்தனர். அங்கிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் கூறும்போது, “இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து, மதுபானக்கூட உரிமையாளர்கள் மகாலிங்கம் (37), தனபால்( 40), மதுபானக் கூடஊழியர்கள் மகாதேவன், கர்ணன்,விஜயகுமார், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE