கரோனா தொற்றால் உயிரிழந்த - தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை : தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையர் வெங்கடேசன் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசு களுக்கு அரசு நெறிமுறைகள்படி வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய தலைவர் எம்.வெங்க டேசன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத் தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு களில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படு கின்றதா? என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவலர் இளவரசி, வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் குபேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக செய்தி யாளர்கள் சந்திப்பில் தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் கூறும்போது, ‘‘ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம், பி.எப், காப்பீட்டு திட்டம் வழங்குவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவது போல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களின் கரோனா பணிக்காக மூன்று மாதம் ஊக்கத் தொகை வழங்க கணக்கெடுப்பு நடத்தவும், கரோனா கால பணியில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கிட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தள்ளது. இதற்கு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய தூய்மைப் பணியாளர் பொருளாதார மேம்பாட்டு கழகமும் மாநிலம் அரசும் இணைந்து தூய்மைப் பணியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தாட்கோ மூலம் கடனுதவி வழங்கி வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34 பேருக்கு ரூ.94 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கரோனாவில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது குறித்து அரசு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE