அவிநாசியில் வேளாண் துறைக்கான - கட்டிட பணியை விரைந்து முடிக்க அமைச்சருக்கு விவசாயிகள் கடிதம் :

அவிநாசியில் வேளாண் துறைக்கான புதிய கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வேளாண் துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு, பாரதிய கிசான் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.வேலுசாமி நேற்று அனுப்பிய கடிதத்தில், "திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செயல்படும் வேளாண் துறை அலுவலகம், குறுகிய கட்டிட அமைப்பில் செயல்படுகிறது.

வேளாண் அலுவலர்களை விவசாயிகள் சந்தித்து அமர்ந்து பேசக்கூட இடவசதி இல்லாத நிலை உள்ளது.

அவிநாசியில் வேளாண் துறைக்கென புதிய கட்டிடம் கட்ட, அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு சொந்தமான இடம், நகரில் பழைய தேசியநெடுஞ்சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உள்ளது.தற்போது, அந்த நிலம் சில தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்அங்கு வேளாண் துறைக்கான அலுவலகம் செயல்பட்டுள்ளது.

இச்சூழலில் பழைய அலுவலகம் செயல்பட்ட இடத்தில் புதியஅலுவலகத்தை கட்டி செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த இடம் உள்ளதால், விவசாயிகள் உட்பட அனைவரும் வந்து செல்ல சிரமம் இருக்காது.

இந்த விவகாரத்தில், அரசு துரித நடவடிக்கை எடுத்து தொடர்புடைய இடத்தை மீட்டு, புதிய வேளாண் துறை அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அனைத்து விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE