தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை : கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

பர்கூர் அருகே சொத்துப் பிரச்சினையில் தாயை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சிகரலப்பள்ளி அடுத்த கப்பல்மேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுரேந்திரன் (51). இவரது தாய் நீலாவதி (71). குடும்ப சொத்து பிரிப்பதில் தாய், மகனுக்கு இடையே தகராறு இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி சிகரலப்பள்ளி அடுத்த தெள்ளபெண்டா பகுதியில் தன் மாந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த நீலாவதியிடம் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்ட சுரேந்திரன், ஆத்திரத்தில் தாயை அரிவாளால் வெட்டிக் கொன்றார். மேலும், அங்கிருந்தவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.

இதுதொடர்பாக பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், சுரேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ-. ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE