சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த - அதிமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால், அச்சிறுமி கருவுற்று குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான அதிமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (70).

இவர், அதிமுகவில் செல்லங் குப்பம் ஊராட்சி கிளைச் செயலாளராக உள்ளார். முனியாண்டி, பெற்றோரை இழந்த தனது உறவு முறை சிறுமிக்கு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி மூடப்பட்டிருக்கும் சூழலில் வீட்டிலிருந்த சிறுமியிடம் தகாத உறவு கொண்டதில், சிறுமி கருவுற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் முனியாண்டி, அவரை மணம்பூண்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அச்சிறுமிக்கு குழந்தை பிறந்து, சில மணி நேரங்களிலேயே இறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த செல்லங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் விமல், திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். போலீஸார், சிறார் வன்கொடுமைக்கு எதிரான போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முனியாண்டியை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE