சுங்கச் சாவடியை அகற்றக் கோரி - கிருஷ்ணகிரி அருகே ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் 54 பேர் கைது :

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கக் சாவடியை அகற்றக் கோரி சுங்கச் சாவடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்54 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மண்டல செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ராசசேகரன் (மேற்கு), காசிலிங்கம் (கிழக்கு), மாவட்ட இளைஞரணி பாசறை நிர்வாகி சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை உள்ளூர் மக்களின் நலன் கருதி உடனே அகற்ற வேண்டும். அகற்றும் வரை சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, கட்டணம் வசூலிக்கும் பகுதிக்கு சென்று தடுப்புகளை திறந்து விட்டு அவ்வழியே செல்லும் வாகனங்களை கட்டணமின்றி இலவசமாக கடந்து போகச் செய்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE