சந்தூர், பர்கூர், ஜெகதேவி முருகன் கோயில்களில் - ஆடிக்கிருத்திகை விழா நாளை ரத்து சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி :

By செய்திப்பிரிவு

சந்தூர், பர்கூர், ஜெகதேவி முருகன் கோயில்களில் நாளை (2-ம் தேதி) ஆடிக்கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சந்தூர் மாங்கனி வேல்முருகன் கோயில், பர்கூர் பாலமுருகன், ஜெகதேவி பாலமுருகன் கோயில்களின் செயல் அலுவலர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சந்தூரில் மாங்கனி வேல்முருகன் கோயில், பர்கூரில் பாலமுருகன் கோயில், ஜெகதேவியில் பாலமுருகன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அலகு குத்துதல், காவடி எடுத்தல், அபிஷேகம் செய்தல், பொங்கல் வைத்தல், அங்க பிரதட்சணம் செய்தல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிகழாண்டில் கரோனா பரவல் காரணமாக ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை (2-ம் தேதி) தமிழக அரசின் உத்தரவுப்படி ரத்து செய்யப்படுகிறது. நேர்த்திக் கடன்கள் ரத்து செய்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே சுவாமி தரிசனம் செய்யும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 6 மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்