சிவகங்கை அருகே - ஊராட்சி தலைவரின் கணவரை கொல்ல முயற்சி : 3 பேரை விரட்டி பிடித்த கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழபூவந்தியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (36), அன்பரசன் (43) ஆகியோர் நேற்று முன்தினம் சக்கந்தியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வுக்குச் சென்றிருந்தனர்.

அவர்களிடம் உறவினர்கள் சிலர் புதுப்பட்டியில் தெருவிளக்கு எரியவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து சுரேஷ்குமார், அன்பரசன், சக்கந்தியைச் சேர்ந்த ராஜா (34) ஆகியோர் கோமாளிப்பட்டியில் உள்ள ஊராட்சித் தலைவர் கோமதி மணிமுத்து வீட்டுக்குச் சென்று முறையிட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஊராட்சித் தலைவரின் கணவர் மணிமுத்துவை அரிவாளால் வெட்ட மூவரும் முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (30), கருப்பையா (55) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை கிராம மக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE