கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - காவலர் உடற்தகுதி தேர்வு தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் காவலர் தேர்வுக்கான உடற்தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இத்தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு உடற்தகுதித் தேர்வு நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 31 மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் தேர்வுகள் இல்லை. மீண்டும் ஆகஸ்ட் 2-ம் தேதி தேர்வு நடக்கிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பெண்களுக்கு உடற்தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

இதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் உடற்தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது.

இத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 808 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 986 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 794 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் ஒரு நாளைக்கு 500 பேருக்கு தேர்வு நடக்கிறது.

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில், டிஐஜி எழிலரசன் மேற்பார்வையில் கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தலைமையில் ஏடிஎஸ்பிகள் இளங்கோவன், வனிதா, டிஎஸ்பி வெங்கடேசன், ஜெயிலர் அப்துல்ரகுமான், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் தேர்வு தொடங்கியது.

உடற்தகுதித் தேர்வுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்ட 500 பேரில் 397 கலந்து கொண்டனர்.

இதில் 309 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இதே போல் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல் பணிக்கான உடற்தகுதித் தேர்வு விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், எஸ்பி நாதா முன்னிலையில் நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று அழைப்பு விடுக்கப்பட்ட 500 பேரில் 90 பேர் வரவில்லை 410 பேரில் உயரம், மார்பளவு சரிபார்த்தல், ஓட்டம் ஆகியவற்றில் 80 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 330 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்