எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய - அரசுப் பேருந்து நடத்துநருக்கு கரோனா தொற்று பாதிப்பில்லை : பரிசோதனை முடிவில் தகவல்

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் எச்சில் தொட்டு பயணச் சீட்டு வழங்கிய நடத்துநருக்கு கரோனா தொற்று பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 16-ம் தேதி கோவையில் இருந்து 57 பயணிகளுடன் திருப்பூர்நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் நடத்துநர் குணசேகரன் (47), பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார். இதில் சிலர் அதிருப்தி அடைந்ததுடன், கரோனா தொற்று அச்சத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து, பேருந்தில் பயணித்த மாநகராட்சி சுகாதாரத் துறை இரண்டாம் நிலை அலுவலர் முருகேசன், சுண்டமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

அதைத்தொடந்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வந்த நடத்துநருக்கு, கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை வந்த பரிசோதனை முடிவில், நடத்துநர் குணசேகரனுக்கு கரோனா தொற்று பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE