பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து - காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி :

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு சூடம் காண்பித்து ஆர்ப்பாட்டமும், சைக்கிள் பேரணியும் நடைபெற்றன.

மத்திய அரசின் தவறான கொள்கையினால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதைக் கண்டித்து, ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டமும், சைக்கிள் பேரணியும் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். நகர் தலைவர் கோபி முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் கோபால், துல்கீப், வட்டார தலைவர் காருகுடி சேகர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் மணிகண்டன், மோதிலால் நேரு பாலகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE