கூலிபாளையம் பகுதியில் - தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல் :

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கூலிபாளையத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், "மாநகராட்சி 2-வது மண்டலம் 19-வது வார்டுக்கு உட்பட்டு கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம், கூலிபாளையம் ஆர்.எஸ்., நஞ்சராயன் குளம்ஆகிய பகுதிகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

கரோனா 2-வது அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே சுகாதாரத் துறை மூலம் வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி மூலம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பகுதிகளை உள்ளடக்கிய கூலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஆனால், இதுவரை தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. இதனால் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தடுப்பூசி செலுத்த முடியவில்லை. எனவே, கூலிபாளையம் பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE