கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் - மாளிகையின் கூடுதல் சுவர் கண்டுபிடிப்பு :

தமிழக தொல்லியல் துறை மூலம் 2020-21-ம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உட்பட 7 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதில், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து, அங்கு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வில், பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக்காசு, மாளிகையின் சுவர், காப்பர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கிடையே கரோனா 2-ம் அலை காரணமாக அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், ஜூன் 15-ம் தேதிக்கு பிறகு அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கின.

மாளிகைமேட்டில் உள்ள மாளிகையின் சுவர்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் கூடுதல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொல்லியல்துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘இப்பகுதியில் புதைந்துள்ள மாளிகையின் சுவர்கள் தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. இங்கு கண்டறியப்படும் ஆணி, ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள வடிகால் போன்ற சுவர் முழு ஆய்வுக்கு பிறகே எவ்வகையானது என தெரியவரும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE