வேகவதி ஆறு தூர்வாரும் பணியை அமைச்சர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதி ஆற்றில் தூர்வாரும்பணிகளையும், ஆற்றில் உள்ளஆக்கிரமிப்பாளர்களை கீழ்கதிர்பூர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியையும் ஆய்வுசெய்தார். அந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள கூட்டுறவுத் துறைக்குசொந்தமான இடத்தில் கூடுதல்பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் வேகவதி ஆறு உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றுநீர் சுலபமாக செல்ல தூர்வாரும் பணிகள் குறித்துஆய்வு செய்யப்பட்டது. வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கிருப்பவர்களை குடியேற்றுவதற்காக கீழ்கதிர்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பில் 2,112 வீடுகள்கட்டப்பட்டுள்ளன. அவர்களைமறுகுடியமர்வு செய்வதற்கானநடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தத் திட்டத்துக்கு1,406 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,007பயனாளிகளுக்கு அடையாள ஆவண சரிபார்ப்பு முடிக்கப்பட்டுவிட்டது.

மீதமுள்ள பயனாளிகள் பட்டியல் ஆட்சியரிடம் கோரப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி தவிர்த்து பயனாளிகள் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தவேண்டியுள்ளது.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வமணி உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE