தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

காரைக்கால்: தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் நேற்று தெரிவித்துள்ளது: கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் துறை மூலம் தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, கரோனா சூழலை காரணம்காட்டி நீட்டித்துத் தருமாறு புதுச்சேரி அரசுக்கு நிகழாண்டு முற்பகுதியில் வணிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில், புதுச்சேரி உள்ளாட்சித் துறை 30.6.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டது. தொழில் உரிமம் புதுப்பிக்க வரும்போது குப்பை வரியை செலுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. 1.6.2017 முதல் 31.12.2020 வரையிலான காலத்தை கணக்கிட்டு வரி செலுத்துமாறு குறிப்பிடப்படுகிறது.

இது வணிகர்களுக்கு பெரும் இழப்பாக அமையும். புதிதாக அமைந்துள்ள அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவியேற்றதும், இதுகுறித்து வணிகர்கள் அமைச்சரை சந்தித்துப் பேசி தீர்வு காணும் வரை, உள்ளாட்சி நிர்வாகம் நிர்பந்தம் செய்யாமல், தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE