தஞ்சை மாவட்டத்தில் 9 வட்டாரங்களில் ஜூன் 25-ம் தேதி ஜமாபந்தி தொடக்கம் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜமாபந்தி எனப்படும் 1430-ம் பசலிக்கான வருவாய் தீர்வாய தணிக்கை ஜூன் 25-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 வட்டாரங்களிலும் ஜன.25-ம் தேதி ஜமாபந்தி எனப்படும் 1430-ம் பசலிக்கான வருவாய் தீர்வாய தணிக்கை தொடங்குகிறது. அதன்படி, பூதலூர் வட்டாரத்துக்கு ஆட்சியரும், திருவையாறு வட்டாரத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், பட்டுக்கோட்டை வட்டாரத்துக்கு உதவி ஆட்சியரும், ஒரத்தநாடு வட்டாரத்துக்கு தஞ்சாவூர் கோட்டாட்சியரும், திரு விடைமருதூர் வட்டாரத்துக்கு கும்பகோணம் உதவி ஆட்சியரும், கும்பகோணம் வட்டாரத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், தஞ்சாவூர் வட்டாரத்துக்கு முத்திரைக் கட்டண தனித் துணை ஆட்சியரும், பாபநாசம் வட்டாரத்துக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியரும், பேராவூரணி வட்டாரத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலரும் ஜமாபந்தி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 25 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஜமாபந்தியில், பூதலூர் வட்டாரத்தில் 4 நாட்கள், திருவையாறு வட்டாரத்தில் 3 நாட்கள், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், பேராவூரணி, வட்டாரங்களில் தலா 5 நாட்கள் நடைபெற உள்ளன.எனவே, கரோனா தொற்று காலமாக இருப்பதால் பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான மனுக்களை நேரில் வழங்காமல், இணையதளம் வழியாக தற்போதே அனுப்பி வைக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE