மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் - கணவர் தீக்குளித்து தற்கொலை :

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த அயப்பாக்கம், ஐயப்பா நகர், காந்தி தெருவில் வசித்து வருபவர் பிரேம்குமார் (38). இவர், அயப்பாக்கம் பகுதியில் வாட்டர் கேன் போடும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன இவருக்கு, கலை என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் பிரேம்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, சம்பளப் பணத்தை வீட்டில் கொடுக்காமல் தினமும் மது அருந்திவிட்டு வருகிறீர்களே, குடும்ப செலவுக்கு என்ன செய்வது என்று மனைவி கலை கண்டித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

இதனால் கோபமடைந்த பிரேம்குமார் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தமனைவி கலை, அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE