கரூரில் வாகன சோதனையின்போது - பணம், வாக்காளர் பட்டியலுடன் சிக்கியவர் மீது வழக்கு பதிவு : திமுக டி-சர்ட்டுகள் பறிமுதல்

கரூரில் வாகன சோதனையின்போது ரூ.8 ஆயிரம் பணம், வாக்காளர் பட்டியலுடன் சிக்கியவர் மீது தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் அருகே உள்ள ராயனூர் வளைவு பகுதியில் நிலையான கண்காணிப்புக்குழுவினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த வெள்ளகவுண்டனூரைச் சேர்ந்த கோபால் என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் வாக்காளர் பட்டியலுடன், ரூ.8,000 பணம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் அமுதா புகார் அளித்தார். அதன்பேரில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் வைத்திருந்ததாக கோபால் மீது போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக டி-சர்ட்டுகள் பறிமுதல்

கரூர் அருகேயுள்ள பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கரூர் தொகுதி பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி வேனை சோதனையிட்டபோது, அதில் திமுக சின்னம் மற்றும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி படம் அச்சிட்ட 1,996 டி-சர்ட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவற்றை வெங்கமேடு போலீஸில் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து மினி வேன் ஓட்டுநர் தங்கவேல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, டி-சர்ட்டுகள், மினிவேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE