பெரியபாளையம் தலைமை காவலர் விபத்தில் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர், பெரியபாளையம் காவல் நிலையத்தில் சில ஆண்டுகளாக தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.

திருவள்ளூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த நாகராஜ், வழக்கம் போல் கடந்த 14-ம் தேதி பகலில் பணிக்குச் சென்றார். பிறகு, அவர் அன்று இரவு பணி முடிந்து, பெரியபாளையத்திலிருந்து, திருவள்ளூருக்கு தன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

வடமதுரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இச்சம்பவத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE