அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினவிழா

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரியலூர் அரசு பள்ளிகளில் பெண் சாதனையாளர் என்ற தலைப்பில் விநாடி வினா, மாறுவேடப்போட்டி மற்றும் மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து பள்ளி மாணவிகளின் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தாமரை.எஸ்.ராஜேந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், முதன்மைக்கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE