காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் 5-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 5-வது நாளாக சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 163 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் காவலான் கேட்அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.லெனின் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் துரை.மருதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த மறியல் போராட்டத்தின்போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இங்கு 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முகம்மது உசேன் தலைமை தாங்கினார். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 83 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE