11 மாதங்களுக்குப் பிறகு கும்பக்கரைக்குசுற்றுலாப் பயணிகள் அனுமதி

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவர். கரோனா ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் இங்கு வரத் தடைவிதிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்துவரும் நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜ் நேற்று முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று கும்பக்கரைக்கு வந்தனர். இவர்களுக்கு உடல் வெப்ப சோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அருவிப் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் அருவிப்பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக புதிதாக மின்சார வாகனமும் இயக்கப்பட்டது.

11 மாதங்களுக்குப்பிறகு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை குளிக்க அனுமதி உண்டு. பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE