விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆட்சியர்

முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலை, தாரபுரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட்ஷீல்டு எனும் கரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், திருப்பூர் - அவிநாசி சாலையிலுள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தவே, தற்போது கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் வரும் என்ற தகவல்கள் ஆதார மற்றவை. எந்தவித அச்சமும் இன்றி, தற்போது முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். திருப்பூருக்கு 13,500 டோஸ்கள் வந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் இதுவரை 285 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.

இதேபோல, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநரும், மருத்துவருமான ஜெகதீஷ்குமாரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்