தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு கொலை வழக்கில் இளைஞர் கைது

திருப்பூர் நகரை சேர்ந்தவர் பாபு மனைவி ரங்கநாயகி (65). இவர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பொறுப்பாளராக இருந்து வந்தார். அந்த விடுதியில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பால்பாண்டி (35) என்பவர் தங்கியுள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேலானதால் தங்கும் விடுதியின் வாயில் கதவை பூட்டி விட்டு ரங்கநாயகி உறங்கச் சென்றுள்ளார்.

அதன்பின்பு விடுதிக்கு திரும்பிய பால்பாண்டி கதவை திறக்குமாறு சத்தம் போட்டுள்ளார். இதுதொடர்பாக ரங்கநாயகி மற்றும் பால்பாண்டி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பால்பாண்டி, ரங்கநாயகியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். காயமடைந்த ரங்கநாயகி, திருப்பூர் மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவ மனைக்கு கடந்த 4-ம் தேதி மாற்றப்பட்டார். நேற்று காலை ரங்கநாயகி உயிரிழந்தார்.

முன்னதாக ரங்கநாயகியை தாக்கியதற்காக பால்பாண்டி மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், நேற்று கொலை வழக்காக மாற்றி பால் பாண்டியை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்