திமுக-காங். கூட்டணியால் அதிமுகவுக்கே வெற்றி சிதம்பரத்துக்கு அமைச்சர் பாஸ்கரன் பதில்

திமுகவுடன் காங். கூட்டணி சேர்ந்ததில் இருந்தே அதிமுகவுக்கு வெற்றி தான் என கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா சிவகங்கையில் அரசு சார்பில் நடந்தது. இதையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன், நாகராஜன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மகேஷ்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், பாம்கோ நிறுவனத் தலைவர் நாகராஜன், ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுநாச்சியார், மருது பாண்டியர், கண்ணதாசன் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டி மரியாதை செய்தது ஜெயலலிதா ஆட்சியில்தான். அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்ததால் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ப.சிதம்பரம் கூறி வருகிறார். ஆனால் திமுகவுடன் காங். கூட்டணி சேர்ந்ததில் இருந்தே அதிமுக வெற்றி பெற்று வருகிறது.

தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்வது வழக்கம் தான். இதற்கு முதல்வர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE