மின்சாரம் பாய்ந்து மாணவர் மரணம்; அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் நஞ்சை காளகுறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவர் மரணமடைந்தார். இதைக் கேட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்ட மாணவரின் தந்தையும் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் நஞ்சை காளகுறிச்சி ஊராட்சி குஞ்சாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து(53). விவசாயி. இவரது மகன் பாலாஜி (17). பிளஸ் 2 படித்து வந்தார். பாலாஜி நேற்று முன்தினம் வீட்டில் ஸ்பீக்கர் பாக்ஸ்க்கு மின் இணைப்பு கொடுத்து பரிசோதித்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட செல்லமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த சின்னதாராபுரம் போலீஸார், வழக்கு பதிவு செய்து பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சாரம் பாய்ந்து மகனும், அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE