பின்னலாடை நிறுவன உரிமையாளர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 3 பேர் கைது

'திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் பின்னலாடை நிறுவன உரிமையாளர் சீனிவாசன் (48). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். சென்னையில் உள்ள மகனை பார்க்க மனைவிமற்றும் மகள் இருவரும் கடந்த 30-ம் தேதி சென்றுள்ளனர். சீனிவாசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த 1-ம் தேதி காலை சீனிவாசன் நடைபயிற்சிக்காக வெளியே சென்று வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில்வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகைகள்,ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பான புகாரின்பேரில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரித்து வந்தனர். அதில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு கார் அந்த பகுதியில் நின்றுள்ளது தெரியவந்தது. கார் பதிவு எண்ணை வைத்து விசாரிக்கப்பட்டது.

இதில், திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ்குமார் (34), அந்த வாடகை காரை திருப்பூருக்கு எடுத்து வந்தது தெரிந்தது. சந்தேகமடைந்து அவரை அழைத்து விசாரித்ததில், சீனிவாசனின் வீட்டு அருகே வசிக்கும் வேன் ஓட்டுநரான அண்ணாமலை (32) என்பவர், சீனிவாசனிடம் பணம் அதிகமாக இருப்பதால் கொள்ளையடிக்க அவரது நண்பர்களான திருச்சி பெட்டவாய்தலை பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரான மணிகண்டன் (35), நாகராஜன், ஸ்டீபன் ஆகியோருடன் பேசியுள்ளார். இதற்கான திட்டத்தை மனோஜ்குமார் உருவாக்கி கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மனோஜ்குமார், மணிகண்டன், அண்ணாமலை ஆகிய3 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் 53 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள நாகராஜ், ஸ்டீபன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்